"அரசு மருத்துவமனை இன்குபேட்டர்களுக்கு விரைவில் பேட்டரி வசதி '
First Published : 30 Jul 2010 09:25:45 AM IST
Last Updated :
திண்டுக்கல், ஜூலை 29: திண்டுக்கல் அரசு மருத்துவமனை குழந்தைகள் வார்டில் உள்ள இன்குபேட்டர்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக மாவட்ட நிர்வாகம் மூலம் விரைவில் பேட்டரி வசதிகள் செய்து தரப்படும் என சட்டமன்ற மனுக்கள் ஆய்வுக் குழுத் தலைவர் கோவை தங்கம் தெரிவித்தார். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு செய்தது. அப்போது வார்டுகளுக்கு வெளியே தங்கியிருந்தவர்களிடம் மருத்துவமனையில் யாராவது பணம் கேட்கிறார்களா?, சிகிச்சை எவ்வாறு அளிக்கப்படுகிறது?, குறைகள் ஏதும் உண்டா? என்பன குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் பிரசவ, குழந்தைகள் வார்டுகளுக்குச் சென்ற குழுவினர் அங்கு பிரசவித்த பெண்களிடம் விசாரணை நடத்தினர். 6 தாய்மார்களுக்கு சட்டமன்ற ஆய்வுக் குழுத் தலைவர் கோவை தங்கம் தலா ரூ.500 உதவித் தொகை வழங்கினார். அவசர சிகிச்சை பிரிவில் ஆய்வு செய்தபோது நாய்கடி, பாம்புகடிக்குத் தேவையான மருந்துகள் உள்ளனவா?, நாய்கடி, பாம்புக் கடிகளால் ஏற்பட்ட மரணங்கள் எவ்வளவு? என்பதைக் கேட்டறிந்தனர். இறப்புகளின் விகிதத்தை குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மருத்துவ நிர்வாகம் வழங்கினால் நடவடிக்கை எடுக்க அரசுக்குக் குழு பரிந்துரை செய்யும் எனத் தெரிவித்தனர். குறைபிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளைப் பராமரிப்பதற்கான இன்குபேட்டர் மின்தடை ஏற்படும்போது வெப்பத்தை வழங்க முடியாமல் போகிறது. இதற்கு பேட்டரி வசதியை மாவட்ட நிர்வாகம் விரைவில் செய்து தரும் என மனுக்கள் ஆய்வுக் குழுத் தலைவர் தெரிவித்தார்.